Monday 23 February 2015

புலம்பியது போதும்

ஒரு பெண்ணாக, ஒரு எழுத்தாளராகஎன்ற அந்தத் தலைப்பு புதியதில்லை. இதற்கு முன் பல அகில இந்திய பெண் எழுத்தாளர்கள் பங்கு பெற்ற  இலக்கிய அமர்வுகளில் விளாவாரியாக பேசப்பட்ட விஷயம்தான். ஆனால் சமீபத்தில் போபாலில் தில்லி சாஹித்ய அகதமி ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் நடந்த இலக்கிய சம்மேளனத்தில் பெண் எழுத்தும் சிந்தனையும்    பொது ஜன மனத்தில் அவர்களைப்பற்றி வரையப்பட்ட கட்டத்தை விட்டு வெளியே வந்து காலமாகிவிட்டதன் பரிணாமம்  தெரிந்தது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று அவர்கள் கோஷம்போடவில்லை. ஆனால் பால் இன பேதம் தங்களை எந்த வகையிலும் இளைத்தவர்கள் ஆக்கிவிடவில்லை என்கிற இயல்பான புரிதலுடன் பேசினார்கள். பெண்  மட்டுமே இச்சமூகத்தின் victim  என்று சொல்வது அபத்தம் என்கிற கருத்து எல்லார் பேச்சிலும்  தொனித்தது. சகோதரிகளே, புலம்பினது போதும்.

சென்ற நூற்றாண்டின் மையத்தில் Second Sex என்ற புத்தகம் எழுதி உலகை, பெண்ணினத்தை  நிலம் அதிர உலுக்கிய சிமோன் தெ பூவா--- நீங்கள் சொன்னவற்றையெல்லாம் நாங்கள் உள்வாங்கிக்கொண்டோம்..புரிகிறது நாம் ஏன் இரண்டாம் பால் இனமாகிப்போனோம் என்பதுஇப்போது சற்றே விலகி இரும்பெண்கள் மீது  கொண்ட ஆண்களின் மிதமிஞ்சிய வெறுப்பே பெண்களை சுயமதிப்பை இழக்கச் செய்து தங்கள் உடலைக்கண்டே வெறுத்து வெட்கவைத்து அவர்களை நபும்சகர்களாக்கியது என்று ஆக்ரோஷத்துடன்  Female Eunuch புத்தகத்தை எழுதி பெண்ணிய கோஷம் போட்ட ஜர்மேன் க்ரியரே, புரிந்து கொண்டோம் உங்கள் ஆவேசத்தைஉங்களைத் தொடர்ந்து  பின்னால் வந்த பல பெண்ணிய கோஷங்களும்  எங்கள் புரிதலை தெளிவாக்கிற்று. காத தூரம் பயணித்தபிறகு எங்கள் எல்லைகள் விரிந்துவிட்டன. மிக விசாலமானது இவ்வுலகம். மிகச் சிக்கலானவை அதன் பிரச்சினைகள்மனித உரிமை மீறல் பல விதமாக புவியை அலைக்கழிக்கிறது. அதன் பயங்கர அரசியலில்  பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமில்லைபெண்ணாக  எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சந்திக்கும் பொறுப்பும் வலிமையும் நம்மிடம் தான் இருக்கிறது என்று நம்புவோம். வேண்டாம் கோஷம். வேண்டாம் இந்தப் புலம்பல்.
  ஒரு கன்னடக் கவிஞர் பழைய பாணியில் ஆண்களைத் துச்சமாக வெறுப்பு கக்கும் வரிகளையும் யோனி , முலை என்ற வார்த்தைகளையும் பிரயோகித்து, பெண்கள் குடித்தால் என்ன தவறு, சாமுண்டீசுவரியும் குடித்தாள் என்கிற பாணியில் கவிதை மழைப் பொழிந்தபோது, அரங்கம் முழுவதும்  எரிச்சலுடன் கையொலி எழுப்பி அவர் பேசுவதை நிறுத்தச்சொன்னது வியப்பை அளித்தது. அப்படிச் செய்தவர்கள் ஆண்கள் இல்லை. வயதான பெண்களோ பழமை வாதிகளோ இல்லை. கல்லூரி மாணவிகள்.
 இலக்கிய படைப்புகளில்  பாலின இன பேதம் ஏன் பெண் எழுத்து என்று படைப்பாக்கத்தில் பிரித்துப் பேசுவது ஒரு அரசியல் என்று ஆகிவிட்ட நிலையில் ஒரு கேள்வி எழுகிறது. புவியில்  சரிசமமாக உள்ள ஆண்களும் பெண்களும் அவரவரது சமூகப் பின்புலத்தில் வெவ்வேறு விதமான பாதிப்புகளை அனுபவிப்பதால் வெவ்வேறு உணர்வு நிலைகளையும் அதற்குத் தக்கவாறான வித்தியாசமான மொழிப்பிரயோகத்தையும் கையாளுகிறார்ளா? அவர்களது  குறிக்கோள்களில், பரிணாம வளர்ச்சியில் வித்தியாசம் உண்டா? அது உண்மையா? உண்மை என்றால் ஏன் அப்படி? அப்படி இல்லையென்றால் ஏன் தொடர்ந்து அப்படி இருப்பதாகச் சொல்கிறோம்? பெண் சார்ந்த  சமூக கலாச்சார இருப்பியல் ஒரு பெண் மொழியைஉருவாக்குமா?        
பெண் எழுத்தாளர் சுமக்கும் மரபுச் சுமை ஆண் எழுத்தாளர் சுமக்கும் சுமையிலிருந்து வேறு பட்டது. அது பெண் எழுத்தில் ஒலிப்பது இயல்பானது. ஆனால் அச் சுமையுடன் அவளது மூதாதையரின் சரித்திரங்களும் , கதைகளும் புராணங்களும் காலத்தால் அவளது நினைவுகளிலிருந்து அழிக்கமுடியாத  கீதங்களும் தாலாட்டுகளும் ஒப்பாரிகளும் பிணைந்திருக்கின்றன. அவளுள் இயல்பான ஒரு கதை சொல்லி இருப்பதை அவளுடைய பாட்டிகளும் கொள்ளுப்பாட்டிகளும் உணர்த்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சொல் இருந்தது என்கிறது பைபிள். அது பெண்ணின் நாவிலிருந்து வந்திருக்கும். மேகாலயாவின் ஷில்லாங்கிலிருந்து ஆங்கிலத்தில் எழுதும்  எஸ்தெர் சீயம் என்ற  காஸி இன எழுத்தாளர் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. காஸி இனம் தாய் வழி சமுதாயம். சீயம் என்பது அவரது தாய் வழி வந்த பெயர். எஸ்தருக்கு மண்சார்ந்த இயற்கை யுடன் ஒன்றி வாழ்ந்த பாட்டியின்  கிராமத்து நினைவுகளும் அங்கு விளக்கில்லாத சமையற்கட்டுகளில் கேட்ட கதைகளுமே இன்னமும் உயிர்ப்புடன் தாக்கம் ஏற்படுத்துவதாகச் சொன்னார்பல ஜென்மத்துக் கதைகள். பாட்டியின் பார்வையில் வெளிப்பட்ட தரிசனங்கள் . அங்கிருந்தே எனது எழுத்துப் பயணம் ஆரம்பித்ததாக இப்போது உணர்கிறேன் என்றார் எஸ்தர்.
தந்தை வழி சமுதாயத்தில் பிறந்த என் பாட்டி சொன்ன கதைகளும் அவை ஏற்படுத்திய தாக்கமும் இன்றும் என்னுள் இருக்கின்றனசிறு வயதில் மற்ற குழந்தைகளுடன் வட்டமாக  நிலா முற்றத்தில் நாங்கள் அமர்ந்திருப்போம். நடு மையத்தில் கற்சட்டியில் சாதம் பிசைத்து பாட்டி அமர்ந்து நீட்டிய எங்கள் பிஞ்சுக் கைகளில் உருண்டைகள் வைத்தபடி ராமாயணமோ மஹாபாரதமோ சொல்வாள்ராமனாக, பத்து தலை ராவணனாக கணத்துக்குக் கணம் மாறுவாள். கையில் என்ன விழுகிறது என்று அறியாமல் சாப்பிடுவோம். சீதை அனுபவித்த வேதனையை நாங்களும் அனுபவிப்போம். ராமன் அவளை சந்தேகிப்பது கண்டு, என்னை பெற்ற தாயே என்னை சுவீகரித்துக்கொள் என்று சீதை மனமொடிந்து பூமிக்குள் மறைந்தபோது தாங்கமுடியாமல் அழுவோம். பெண்ணிய வித்து எங்களுக்குள் அந்தத் தருணம் விழுந்திருக்கவேண்டும். பாட்டியின் வர்ணனையில் அது சீதையின் கதையாக இருந்தது. ராமனின் கதை அல்ல. இப்போது யோசித்துப் பார்க்கையில் அப்படித்தான் நாங்கள் உணரவேண்டும் என்பது பாட்டியின் எண்ணமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. பழமைவாதம் மிகுந்த அந்தச் சூழலில் பாட்டிக்கு எப்படி அப்படி ஒரு பார்வை வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரியா எழுத்தாளரும் ஞானபீட விருது ஆகிய பெரிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான ப்ரத்திபா ரே, பெண்களுக்கு இந்தப் பார்வை இயல்பானது என்றார் அழுத்தமாகபெண்களே மரபுகளின் தொன்மங்களின் , கலாச்சாரத்தின் காவலர்கள்அதில் புதுப்புது அர்த்தங்களை கண்டு சமகாலத்துக்குப் பொருத்துபவர்கள் . எஸ்தர் சொல்வதுபோல நிகழ்காலம் தொலைவாக, இறந்த காலம் அண்மையாகப் படும் விந்தை அதுஇளம் வயது முபீன் சாதிகா பண்டை தமிழில் தாம் எழுதும் கவிதையைப் படித்தது  அதை ஊர்ஜிதப்படுத்தியது.      
ஹைதராபாத்திலிருந்து வந்த எழுத்தாளர் ம்ருணாளினி எழுத்துலகம் பெண்கள் எள்ளல் கட்டுரைகள் அல்லது ஹாஸ்ய கதைகள் எழுதினால் அதை இலக்கியமாக நினைப்பதில்லை என்றார். பெண்ணியவாதிகளோ பெண்ணிய கோஷம் அவர் போடாததால் அவரை ஒரு எழுத்தாளராகவே நினைப்பதில்லை என்றார். தமிழகத்தில் சமீபகாலமாக கருத்துரிமைக்காக ஏகோபித்த குரல் எழுப்பிவரும் பத்திரிக்கை/எழுத்தாள சமூகம், நான் ஆங்கிலத்தில் எழுதிய அரசியல் தலைவரின் வாழ்க்கை சரிதம் வெளியிடத் தயாரான நிலையில் தடை போடப் பெற்று மடிந்து போனபோது [ஒன்றிரெண்டு பேரைத் தவிர] எனது கருத்துரிமைக்காகக் குரல் எழுப்பவில்லைநான் பெண் என்கிற காரணத்தாலா? படைப்பிலக்கியவாதிகளுக்கு அத்தகைய குறுகிய பட்சமான பார்வை இருக்காது என்று நினைக்க ஆசைப்படுகிறேன். அரசியல் அதிகாரத்துக்கு பயப்பபடாதவர்கள் இன்று ஆண்கள் கோலோச்சும்  தமிழகத்துப் பத்திரிக்கை உலகத்தில் இல்லை .
பெண்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள்;கதைகள் புனைகிறார்கள் யாருடைய அங்கீகாரமும் பாராட்டும் எதிர்பார்க்காமல்எந்த பீற்றலும் தம்பட்டமும் இல்லாமல்வரலாற்றில் காலூன்றி  நின்ற நிலையில் அவர்களது எல்லைகள் விரிந்துவிட்டன. மனித நேயமே அவர்கள் சொல்லும் சேதி. பெண்ணியம் என்பது மனித உரிமைக்குரல்களில் ஒன்று. அவளது தேடல்களில் அவளுக்குக் கிடைக்கும் தரிசனங்கள் அவளது பாட்டிகளும் கொள்ளுப்பாட்டிகளும் சொன்ன கதைகள் வழியாக வெளிப்படுபவை.     

1 comment: