சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் மைல்ஸ் ஃப்ரான்க்லின் விருது என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் [பெண் எழுத்தாளர் என்ற பிரிவினையை நான் எதிர்த்தாலும் அதைக் குறிப்பிடுவது இங்கு அவசியமாகிறது] ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்த சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தம் அவரை வாட்டுகிறது. “என்னுடைய வாழ்நாளில் ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்தைத் தீவிர மாக எடுத்துக்கொள்ளப்படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியாது.”
என்கிறார். [தமிழ் நாட்டில் மட்டுமா நம் வர்க்கம் லோல்படுகிறது? வாக்குவாதத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது. சகோதரிகளே, அது க்ரோமோசோம் [மரபணுக்கள்] சம்பந்தப்பட்டது.] “ நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அவ்வளவுதான் இனிமேல் அவளது எழுத்துப் பணி என்கிறார்கள். நல்ல கூத்து . மார்ட்டின் ஏமிஸ் [ ஆண்] ஸுக்கு ஆறு குழந்தைகள். அவருடைய எழுத்தில் ஏதும் தொய்வில்லையே?” ஈவிவைல்டின் வருத்தம் அதுமட்டுமில்லை. பல ‘தூய’ ஆஸ்திரேலிய எழுத்தாளர்கள் இருக்கையில் அரை ஆஸ்திரேலியரான இந்தப் பெண்ணுக்கு எப்படி விருது கொடுக்கப்போச்சு என்ற விமர்சனம் ஆஸ்திரேலிய இலக்கிய வட்டத்தில் எழுந்திருக்கிறது. இது என்ன குறுகிய பார்வை என்று கேட்கும் அந்தஸ்து நமக்கு நிச்சயம் இல்லை.
‘நான் கர்ப்பமாக இருப்பதால் என் எழுத்துப்பணி இனிமேல் தொடராது என்று ஆண் உலகம் முடிவுகட்டுவதாக’ ஈவி வைல்ட் சொல்வது சுவாரஸ்யமான விஷயம். நடிகைகளுக்கு அத்தகைய நிலை ஏற்படுவது ஆச்சரியமான விஷயம் இல்லை. குழந்தை பிறப்பதால் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் குறைந்து விடுமா என்ன? சென்ற நூற்றாண்டில் மிகக் கட்டுப்பாடான மரபு சார்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு ஏழு குழந்தைகள் பெற்ற லலிதாம்பிகா அந்தர்ஜெனம் யாரும் அறியாமல் இருள் கவ்வும் இரவுகளில் அமர்ந்து, தன்னைச்சுற்றி இருந்த பாசாங்குத்தன உலகைப்பற்றி எழுதிய எழுத்தில் காண்பித்த வீச்சு அசகாய சூரத்தனம் அல்லவா?
இது , அதாவது, தாய்மை அடைந்தவர் வேறு எதற்கும் லாயக்கில்லை அல்லது தொடர்ந்து சிறப்பாகச் செயல்படமுடியாது என்று நினைக்கும் பொதுவான போக்கு மிகப் பாமரத்தனமானது. கற்பனையற்றவரின் மெதப்பு. . ஆற்றல் மிகுந்த பெண்கள் அதைப்பற்றி நினைப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. தாய், தாய்மை என்கிற உருவக மாஹாத்மியத்துக்குள் பெண்ணை அமுக்குவது ஒரு அரசியல் என்பதில் சந்தேகமில்லை. தன்னால் முடியாததை ஒரு பெண் செய்கிறாளே என்கிற பிரமிப்பும் அசூயையும் ஏற்படுத்திய உருவகம் அது.
நமது நாட்டில் ‘தாய்‘ என்கிற சொல் விசேஷ அடையாளங்கள் கொண்டது. அபத்தத்தின் உச்சியைத் தொடும் அளவுக்கு பரிமாணம் பெறுவது .
அரசியல் தலைவர்களுக்குத் தாய் ஒரு கௌரவக் கவசம்.. கண்ணிய பிம்பத்தைக் கொடுப்பவர். நவாஜ் ஷெரீஃபும் நரேந்திர மோடியும் அவர்களுடைய பரஸ்பர அம்மாக்களைப் பற்றிப் பேசி உணர்ச்சிவசப்படுவார்கள். இவர் பஷ்மீனா சால்வையை அனுப்பினால் அவர் ஒரு வெண்பட்டுச் சேலையை அனுப்புவார். அன்னையை மதிக்கும் தனையன் மாசற்ற தலைவன் என்கிற பிம்பத்தை ப்பெறுவார்கள்.
நம்மை ஆள்பவர் பெண்ணாக இருந்தால், அவரே சகலருக்கும் அம்மா. ஜகத்துக்கே அம்மா. அவர் பெயரில் வரும் எல்லாமே அவரது அருளால் கிடைப்பவை. அவர் தரும் பிரசாதம். போற்றுதும் போற்றுதும் அம்மா போற்றுதும்! அம்மா செல்லும் ஹெலிகாப்டர் போகுது.... வணங்குதும் வணங்குதும்.
தெற்காசிய ஆண்களுக்கு , ‘அம்மா’ எனும் அப்ஸெஷன் அதீதமானது. oedipal obsession என்று சொல்லாம். தாயைப் பீடத்தில் வைத்தவுடன் மற்ற பெண்களை மரியாதைக்குறியவர்களாகக் கருதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாய்மைக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவமே அந்த அந்தஸ்தைப் பெறுவது ஒரு பெண்ணுக்கு அடிப்படை அவசியம் என்கிற ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது. பெண்களின் வாழ்வின் குறிக்கோளை அந்த வட்டத்துக்குள் இருத்திவிடுகிறது. தாயின் பிம்பம் கவித்துவம் மிக்கது : தன்னலமற்ற தியாகி. அன்பின் சிகரம். சொந்த விருப்பமோ ஆசைகளோ அற்றவள். மன்னிப்பவள். கருணயின் இருப்பிடம்.
அவளது ஆகச் சிறந்த சாதனை தாய்மை. அதற்குமேல் என்ன சாதிக்கவேண்டும்?
இது தாய் என்னும் ஐதீகத்தின் மேல் உள்ள ஈர்ப்பு மட்டுமே. இந்தியாவில் ஆண்-பெண் உறவுகளில் பார்வையில் இருக்கும் விபரீத போக்குக்கு, ஏற்படுத்தியிருக்கும் gender crisisக்கு இதுவே காரணம் என்கிறார் ஒரு ஆய்வாளர். எல்லா பெண்களையும் தாயாக நினைக்கமுடியாமல் போவதற்கு இதுதான் காரணம் என்கிறார்.. பெண்களை இரண்டாம் மூன்றாம் கடைநிலை பிரக்ருத்திகளாக நினைப்பதும் செக்ஸ் அடையாளமாக மட்டுமே பார்ப்பதற்கும் இதுதான் அடிநில வேர்.
நவாஜ் ஷெரீஃபும் நரேந்திர மோடியும் தங்கள் ட்விட்டரில் தங்கள் அம்மாக்களைப்பற்றி எழுதி தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டிருந்தபோது இன்னொரு செய்தி பத்திரிக்கைகளில் அடிபட்டது.
பதாயூன் என்கிற ஒரு உத்தர்பிரதேஷ கிராமத்தில் ஒரு மாமரத்துக்கிளையில் இரண்டு தலித் சிறுமிகள் தலை குனிந்து கயிற்றில் தொங்கினார்கள். பாலியல் வன்முறைக்கு இறையாகி, கொல்லப்பட்டு .
பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில் . இரண்டிற்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு?
நமது கலாச்சார பாசாங்குத்தனத்தில் இருக்கிறது அதற்கு விடை.
No comments:
Post a Comment